Monday, October 7, 2013

முற்றாக முஸ்லிம்களை மறந்து விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

Commented by nizamhm1944 on:    http://tinyurl.com/paxxlma

Voice of Mannar

முற்றாக முஸ்லிம்களை மறந்து விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

முதலமைச்சரின் அறிக்கை எழுந்தமானமாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டது போன்று தோற்றினாலும், என்னைப் பொறுத்து அது உண்மையை மட்டுமே சுமந்து கொண்டுள்ளது என்றுதான் கருதுகிறேன்.  

காரணம், புலிகள் வடக்கு முஸ்லிம்களை விரட்டி அடித்திருந்தாலும், தமிழர்கள் அதற்கு ஆதரவானவர்கள் அல்லர் என்பது அனைத்து முஸ்லிம்களும் அறிந்த உண்மை. விசேடமாக வடக்கைப் பொறுத்து முஸ்லிம்களும் தமிழர்களும் மிகவும் சிறப்பான உறவையே பேணி வந்தவர்கள் என்பது, நான் அந்த நாட்டவன் என்ற முறையிலும், தமிழர்களோடும், சமூக சேவைகளோடும் தொடர்புபட்டிருநத காலங்களில் என்னால் அறிய முடிந்தவை.  ‌

மேலும், தமிழர் முஸ்லிம்களுக்கு இடையே எப்போதும் மோதல்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கவில்லை.  தேர்தல் காலங்களில் கூட தமிழரை ஆதரித்த முஸ்லிம்களும், முஸ்லிம்களை ஆதரித்த தமிழரும் இருந்திருக் கிறார்கள். அக்காலங்களில் இட்ம் பெற்ற சிறு சச்சரவுகள் கூட தமிழருக் குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் இடம் பெற்றனவே தவிர, தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம் பெற்றவை எனக் குறிப்பிடுமளவுக்கு நடந்ததில்லை.  

ஆதலால், விக்னேஸ்வரன் அவர்கள், ”என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக!” எனக் கூறியிருப்பது, தெளிவாக பிரிந்து நிற்கும் தமிழரையும் சிங்களவரையும் குறிப்பிடுவதோடு, இணைந்து வாழும் தமிழரும், தமிழைத் தம் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும்   ( அவர்கள் மொழிவாரியாக தமிழர்கள் என்ற வரைவுக்குள் அடக்கப்படக் கூடியவர்கள்,) பிரச்சினை இன்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதையும், எங்களுக்குள் பிரிவினை இல்லை என்பதையும் பூடகமாகவே வெளிப்படுத்தியதாக இருக்கலாம்.   

அப்படியில்லாது, கட்டுரையில் கூறியிருப்பதுதான் அவர்கள் நிலை என்றால், நிச்சயமாக அவர்களது பயணம் வெற்றி அளிக்கப் போவதில்லை என்பதே உண்மை ! முஸ்லிம்களைப் புறந்தள்ளிய எவ்வித போராட்டங்களும், சிறுபான்மைப் போராட்டம் என்ற வரைவுள் அடங்கா.  முஸ்லிம்கள் என்றொரு இனம் இல்லை என நினைப்பார்களாயின்,  மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி , ”சிறுபான்மை“ எ்னறு எவரும் இல்லை எனக் கூறி வருவதை ஏற்பதாகவே இருக்கும். 

மேலும், இலங்கையில், தமிழரும் சிங்களவரும்தான் இரு இனங்கள் என்ற ரீதியில், அவர் சிந்திருக்க முடியாது. காரணம், முஸ்லிம்கள் என்றொரு இனம் இருக்கின்றது என்பதை அறிந்திருந்தனால்தான், அவர்கள் முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக்கூடச் செய்தும்,  முஸ்லிம் ஒருவருக்கு போனஸ் ஆசனம் ஒன்றையும் வழங்கி இருக்கின்றார்கள்.  

அடிக்கடி அரசியல்வாதிகள் தெற்கில் மூவினங்களின் ஒற்றுமை பற்றிக் கூறுவது வெறும் பித்தலாட்டமே தவிர இல்லை. உண்மையில் மூவினங்களுக்கும் இடையில் ஒற்றுமை நிலவியே வருகின்றது. அதனை பெரும்பான்மை கிராமங்களில்கூட சிங்ளவரும், தமிழரும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்ந்தேு வருகின்றனர்.  

அரசியல்வாதிகளும், மதவாதக் குழுக்களும்தான் உண்மையில் மக்களைக் கூறு போட்டு தம் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். 

புலிகளின் வீழ்ச்சிக்குரிய காரணங்களில் பிரதானமான ஒன்று, சிறுபான்மை இனத்தவருக்காகப் போராடுவதாகக் கூறி, இன்னொரு சிறுபான்மை இனத்தை வெளியேற்றிய முட்டாள்தனமே என்பதை அவர்களும் உணர்நதிருந்தார்கள் என்பதை அவர்களின் பின்னாட்களின் செயற்பாடுகள் உணர்த்தும்.  அதனால், அந்த இமாலயப் பிழையை நன்கு தெரிந்த தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள், மீண்டும் செய்து தமக்கே வினையை விதைக்க மு‌ற்பட மாட்டார்கள் என்று திடமாகக் கூறலாம். 

அதனை, ”தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது.” என்ற வரிகளின் மூலம் அறியலாம். 

No comments: