சர்வதே சிறுவர் தினத்தையொட்டிய பிரசுரம்
இத்தா என்பது வல்ல அல்லாஹ்வால் குர்ஆனில் பெண்ணினத்துக்கு ஓர் அருளாக, ஆதரவாகப் பரிந்துரை செய்யப்பட்டு, காத்திருக்குங் காலம் குறிப்பிடப்பட்டுக் (மேலும், உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு விட்டு இறந்து போயிருப்பின், அவர்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்களுக்காகக் காத்திருப்பார்கள் – 2:234 ) கட்டாயமாக்கப்பட்டுள்ள கணவனை இழந்தவர்களுக்கான ஓர் கடமையாகும். மணமுடித்துத் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட ஓர் பெண், தான் தனது கணவனை அவனது இறப்பினாலோ, விவாக விடுதலையினாலோ இழக்க அல்லது பிரிய நேரிடும் சந்தர்ப்பங்களில் – அந்த ஷணத்திலிருந்தே – வயது வேறு பாடின்றிக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய கடமை. இதை நாம், வாசகர் விளக்கம் கருதி ‘கருவறியுங் காலம்’ எனக் குறிப்பிடுவோம். கீழ்க்காணும் திருவசனங்கள் மேற்கண்ட கூற்றை விளக்கப் போதுமானவை. (வசனங்கள் 2:226,228,234,235, 33:49, 65:1,5) விரிவு கருதி வசனங்கள் தரப்படவில்லை ).
அல்லாஹ் புனித குர்ஆனில் பல இடங்களில் எதனையும் வீணாகவோ, விளையாட்டாகவோ படைக்கவில்லை என்றும், மக்களுக்கு சிரமத் தையோ, கஸ்டத்தையோ விரும்பவில்லை என்றும், இலகுவையே விரும்புகின்றான் என்றும் (2:185), குர்ஆனை ஓர் அருட்கொடையாகவே யன்றி இறக்கி வைக்கவில்லை என்றும் குறிப்பிடுவது உய்த்துணரப் படின்- இக்கட்டுரையில் வலியுறுத்தப் படும், அல்லாஹ்வால் முன்வைக் கப்பட்ட இத்தாவின் இன்றியமையாமையையும், அதில் பலவந்தமே இல்லை என்பதும் மிகவும் தெளிவாகிவிடும். விளக்கப்புகின் இக்கட்டுரை நீண்டுவிடும். அறிவாளருக்கு இவ்வளவே போதுமாகும். ‘எனினும் இது கல்வியறிவு கொடுக்கப்பட்டார்களே அவர்களின் நெஞ்சங்களில் தெளிவான வசனங்களாகும்’ (29:49).
இத்தா ஓர் உயரிய நோக்கோடு அல்லாஹ்வால் முன்வைக்கப்பட் டுள்ளது. இதில் பச்சிளம் பாலகரின் பிறப்புரிமை, தன்தகப்பன் யாரென்பதை ஐயமற அறிந்து கொள்ளும் தனியுரிமை, தன் தந்தையின் குடும்பத்தில் அங்கத்தவனாகும் வாரிசுரிமை, பொருளாதாரத்தை உயர்த்திவிடும் சொத்துரிமை போன்றவை உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கள்ளங்கபடமற்ற அப்பாலகர் சமுதாயத்தில், இழி பிறப்பு என்ற, தகப்பன் பெயர் தெரியாதவனென்ற அவப் பெயர்களற்ற, தொல்லைகளுக்காளாத நல்ல வாழ்க்கையை அனுபவிக்கும் உன்னத வாய்ப்புக் கிட்டுகிறது. தந்தையாரென அறியப்படுவதால் அநாதைகள் பல்கிப் பெருகும் அலங்கோலம் தவிர்க்கப்படுகின்றது. தெருக் குழந்தை களாக, வாழ வழியின்றி, தடுக்கப்பட்ட பாலியல் தொடர்புகள், போதை வஸ்து வியாபாரங்கள் செய்வதுடன், கொள்ளை, கொலைகளிலும், சமுதாயத்தைப் பழி வாங்குதலிலும் ஈடுபடும் சூழல் அகற்றப்படுகிறது. இதனால் சமுதாயத்தைச் சீரழிக்கும் விஷக்காளான்கள் முளைப்பது தடுக்கப்படுகின்றது. இப்படி எத்தனையோ நன்மைகள் இத்தாவில் மறைந்துள்ளன….
மேலும், இத்தாவின் சட்டத்தில் ஆண்களின் தொடர்பு அறவே புறந் தள்ளப்படுவதால், ஆணின் தொடர்பின்றியும் பிள்ளைகள் உண்டாகும் விந்தைகளினால் ஏற்படும் விபரீதங்களுக்கு விடை பகர்ந்து, அவசிய மற்ற விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளியும் வைக்கிறது. மேலாக, உடன் விளைவாக, பெண்ணுரிமை பேணப்படுகிறது, அவளது கற்பு கேள்விக் குறியாக்கப்படுவதில்லை. அப்பெண்கள் வழி தவறும் சந்தர்ப்பங்கள் ஒழிக்கப்படுகின்றன. மறுமணம்கூட இக்காலத்தில் தடை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் உடனடியாக அப்பாவிகளான அப்பெண்கள் ஆதரவை இழப்பதில்லை. அப்பெண்களை குறைந்தது ஒரு வருடம் வரை தமது வீட்டில் வைத்துப் பராமரிப்பது கணவனின் குடும்பங்களின் மேல் கடமையாகியும் விடுகிறது. சமுதாயம் கூட அக்கடமையிற் பங்கு கொள்கிறது. இறை கட்டளைகள் இன்னல்களை வருவிக்காதென்பது உறுதியாகத் தெளிவாகிறது.
விஞ்ஞானம் விஸ்வரூபமெடுத்து விந்தைகள் செய்யும் இக்கால கட்டத்தில், இத்தகு சட்டங்கள் தேவைதானா? கருவறியப் பல வழி களுண்டே போன்ற நியாயபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப் படுவது பின்தள்ள, புறந்தள்ளப்படக் கூடியதல்ல, மாறாக விளக்கம் பெறத்தக்கது. நீங்கள் அறியாதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங் கள் ((16:43, 21:7) என்ற அறை கூவலின் பின், ‘அறியாதவர் விளக்கம் பெறவேண்டிய கட்டாயமும், அறிந்தவர் மீது விளக்கம் தரவேண்டிய கடமையும்’ முன்வைக்கப்பட்டுள்ளமை, உய்த்துணரப்பட வேண்டியது. அதைவிடுத்து இது கட்டாயக் கடமையென்றோ, குர்ஆனில் கூறப் பட்டால் மறுப்பின்றி செய்தேயாக வேண்டும் (மார்க்கத்தில் பலவந்த மில்லை 2:256 ) என்பது போன்றோ கூறி அல்லாஹ்வில் பழிபோடும் பத்தாம்பசலிக் கொள்கைகளை, தீவிரப் போக்கைப் பின்பற்றுவது (அவன் பரிசுத்தமானவன்; அவர்கள் கூறுவதைவிட்டும் மிகப்பெரும் உயர்வாக உயர்ந்தவன்-17:43) இஸ்லாத்திற்கு இழிவையும், இஸ்லாமிய அடிப்படை களையே தகர்க்கும் அல்லது பிறரைப் பிழையாக விளங்க வைக்கும், ஏன் இறை கருத்தையே நிராகரிக்கும் இழிநிலைக்குள்ளும் தள்ளிவிடும். ‘இன்னும் அறிவின்றி அல்லாஹ்வுடைய விஷயத்தில் தர்க்கம் செய்கின் றவரும் மனமுரண்டான ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்று கிறவரும் மனிதர்களில் உள்ளனர்.’ 22:13
இத்தாவின் அவசியமும், இன்றியமையாமையும் விஞ்ஞானத்துக்கும் அப்பால் சென்று உண்மைகளை வெளிப்படுத்தி, நன்மைகளை விளைத்து, களங்கங்களில், அவமானங்களில் இருந்து தாய்க்கும், சேய்க்கும் முழுமையான பாதுகாப்பை நல்கும் ஒப்பற்ற தன்மையையும் பின்வரும் குர்ஆன் வசனம் கோடிட்டுக் காட்டி யுள்ளது. இது முழு உலகுமே ஏற்றுக் கொண்ட உண்மைகளினால் விளங்கிக் கொள்ள, ஏற்று நடைமுறை ப்படுத்த, வீணான சந்தேகங்களைக் களைய, விஞ்ஞானத்தையே வியக்க வைக்கப் போதுமானவையாகும்.
கருவைக் கண்டறிய விஞ்ஞானத்திற்குச் சில விடயங்களும் தடயங்களும் இருக்க வேண்டும். விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கருவுற்றுள்ளமை (அவ்வாய்வுகள்கூட சிலவேளைகளில் பொய்த்து விடுகின்றன ) தெரிய வருகின்றதே தவிர பெண்ணின் மாசற்ற தன்மையோ, பிள்ளையின் பிறப்போ முறையே உறுதி செய்யப் படுவதில்லை; புனிதப்படுத்தப்படுவதில்லை; பகிரங்கப்படுத்தப்படுவ தில்லை.
நீதி செய்யப்பட்டால் மட்டும் போதாது நீதி செய்யப்பட்டது வெளிப் படுத்தப்படல் வேண்டும் என்ற தார்மீகக் கோட்பாட்டின் அடிப்படை யில் கணவனை இழந்தவள் காத்திருக்குங் காலத்தை நடை முறைப்படுத்தும் போது தாய்மையின் தூய்மை மறு பேச்சுக்கு இடமின்றி வெளிப்பாடா கின்றது. இந்நடைமுறை அவ்விதவையில் தன்னளவில் விளக்கம் தந்து அவளது புனிதத்துக்கு சாட்சியம் தந்து நிற்கின்றது. அத்தோடு கணவனை இழந்து துன்பத்தில் மூழ்கி இருப்பவளை அநாவசியத் தொல்லைகள் கொடுக்காது இத்தாவை அனுஷ்டிக்கும் போது அவளது நம்பகத் தன்மை தானாக வெளிப்படுகின்றது. இத்தா அவசியம் என்பதனை விளக்க பின்வருவனவற்றை முன்வைப்பது அவசிய மாகிறது. இதன் மூலம் யாவுமறிந்த அல்லாஹ்வின் வல்லமையும், அறிவின் நுட்பமும் புலப்படும். தாய்க் குலத்தில் அவன் கொண்டுள்ள அதிசிரத்தையும், உலக மாந்தரில் அவன் வைத்திருந்த ஒப்பற்ற காருண்யமும், அவன் இத்தா வைக் கட்டாயமாக்கியதன் ரகசியமும், அவசியமும், அகில உலகமும் அதை நடைமுறைப்படுத்த வேண்டி இருப்ப திலுள்ள அவசரமும் தெளிவாகும். தாயின் தூய்மை கேள்விக் குறியாக்கப்படுபோது, ஒவ்வொரு மனிதனும் அவமானத்தைத் தழுவிக் கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகிவிடுகின்றது. இதற்காக மட்டுமே ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஓர் ஷணம் தன்தாய் களங்கமுற்றவள் என்ற நிலையைச் சிந்திக்கும் ஒவ்வொரு வனும் இதில் மறைந்துள்ள இறை கருணையைப் புரிந்து கொள்ள முடியும்.
இப்போது அல்லாஹ் முதல் மனிதனையும், அவரது மனைவியையும் தன் கையாலேயே படைத்ததாகக் கூறுவதில் மறைந்துள்ள, தாயிலும் சேயிலும் களங்கம் கற்பிக்க முடியாத, காருண்யமும், அவனது நுண்ணறிவும், அனைத்தையும் அறிந்தவன் என்பதிலுள்ள யதார்த்தமும் தெளிவாகின்றன.
1. முழு உலகும் ஏற்றுக் கொண்ட யேசுபாலகனான, குர்ஆன் மர்யமின் மகனெனப் பரிந்துரை செய்யும் ஈஸா (அலை) அவர் களின் உற்பத்தி. அதாவது திருமணமாகாது, ஓர் ஆணின் சுகத்தையோ தொடர்பையோ, தீண்டலையோ புறந்தள்ளி நடந்த, இறைவனால் ஓர் இறை பக்தையான கன்னியில் நடத்தப்பட்ட ஓரே அற்புதம். உலக வரலாற்றில் நடைபெற்ற ஒப்பற்ற அற்புதம். அப்பாலனுக்குக் கொடுக்கப்பட்ட அதியுயர் கௌரவம். ( 3:45, 47, 4:171, 19:16-22, 21:91, 66:12 )
2. ஸக்கரியா என்றழைக்கப்படும் ஸக்கரியா (அலை) அவர்களின் கிழட்டு (மாதவிடாய் நின்றுபோன), மலட்டு (பிள்ளையே பெறாளென்று தீர்மானிக்கப்பட்ட) மனைவி பிள்ளை பெற்ற சம்பவம். (3:38-41)
3. ஏபிரஹாம் என்றழைக்கப்படும் இப்றாஹிம் (அலை) அவர்களின் கிழட்டு (மாதவிடாய் நின்றுபோன), மலட்டு (பிள்ளையே பெறாளென்று தீர்மானிக்கப்பட்ட) மனைவி ஈஸாக் என்ற இஸ்ஹாக் (அலை) அவர்களையும், ஜேக்கப் என்ற யஃகூப் (அலை) அவர்களையும் ஈன்றெடுத்த சம்பவம். (51:28,29). இவற்றில் சிறப்பு என்னவென்றால் அப்படி அதிசயமாகப் பிறந்த குழந்தைகள் அனைத்தும் உலகை இரட்சகனின் நபிமார்களாகத் தெரிவு செய்யப்பட்டமையே.
இவற்றிலிருந்து பிள்ளை எப்படியும் பிறக்க முடியும் என்பது தெரியவருகிறது. கல்யாணமாகாது களங்கமற்ற வாழ்க்கை நடத்திய மங்கைக்கும், கிழவியும் மலடியும் கணவனை இழக்காத நிலையில் கருத்தரித்த சந்தர்ப்பங்களும் உண்டென் பதால் எதுவும் நடந்து விடலாம். பெண் கருவுற்ற அதே ஷணத்தில் கணவனை ஏதாவது காரணத்தால் இழந்துவிடும் சந்தர்ப்பம், மருத்துவ சோதனைக்கான தகவல்களையோ, பின்னணியையோ தரா. அச்சந்தர்ப்பத்தில் அவ்வபலையை யாரும் பரிசோதனை செய்ய முற்படுவதில்லை. மாறாக ஆய்வுக்குட்படுத்தி னாலும் கருவுற்ற உண்மை வெளியாகாமல் போவதுமுண்டு. காரணம் மூத்திர பரிசோதனையிலோ, இரத்த பரிசோதனையிலோ அன்றி ‘ஸ்கேன்’ முறையிலோ கருவுற்றமையைக் கண்டுபிடிக்க கருத்தரித்த பின் குறித்தளவு குறைந்த கால அவகாசமாவது தேவை. கருத்தரித்தமை பிந்தியே கண்டு பிடிக்கப்படுகிறது. கருத்தரிக்குங் காலம் சில வேளை களில் மூன்று நாட்களாகக் கூட அமையலாம். இந்தச் சில நாட்களே அந்தப் பெண்ணில் மாசு கற்பிக்கப் போதுமானதாக ஆகிவிடும். இச்சந் தர்ப்பத்தில் விஞ்ஞான சோதனையே அவளுக்கு வினையாகி அவளுக் கெதிராக சாட்சியம் கூறி அவளுக்குத் தீரா அவமானத்தைத் தந்து, சேய்க்கும் மாறா வேதனையைத் தரும் விபரீதத்தை விளைவித்து விடுகின்றது.
மேற்கண்ட காரணங்கள் விஞ்ஞான பரிசோதனைகளால் கண்டறிய முடியாக் கையறு நிலையைத் தெற்றெனத் தெளிவுபடுத்துகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவ பரிசோதனைகளால் பிள்ளை களின் பிறப்பின் நம்பகத் தன்மையை உறுதி செய்திடவோ, தாயின் புனிதத்துக்கு சாட்சியம் கூறிடவோ முடிவதில்லை? அதனால் தாயும் சேயும் அபலைகளாக முகவரி இழந்து அவமானச் சின்னங்களாக தெருவில் தள்ளப்படுகிறார்கள், சருகுகளாக.
இந்நிலையில், ‘கருத்தரித்தமை மருத்துவ பரிசோதனைகளால் கண்டறியப்பட முடியாதென்பதும், தாயினதும் சேயினதும் நலன் பேணப்பட முடியாதென்பதும்’ போன்ற உண்மைகள் கருத்தில் எடுக்கப் பட்டே இத்தா சட்டமாக்கப்பட்டுள்ளது, என்பதன் தார்ப்பரியத்தை ஆழ்ந்து நோக்குவோர் அறிந்து, வியந்து, ஏற்று, பின்பற்றுவர். மட்டுமல்ல பெண்ணிலை வாதம் பேசுவோர், பெண்களுக்கான இத்தா என்ற சட்டம் எத்துனை தூரம் பெண்களின் கற்புக்கு அவதூறு வராது காவல் புரிகிறது; கணவனை இழந்த காலத்தில் பாதுகாப்பை நல்குகிறது; ஆதரவுக்கரம் நீட்டுகிறது; பெண்களில் எவ்வளவு அக்கறை கொண்டு சட்டம் யாக்கப்பட்டுள்ளது போன்றவற்றை அறிந்து கொள்வர். இதை விடச் சிறந்த சட்டமொன்று பெண்களின் பாதுகாப்புக்காக உலகில் எங்கும் யாக்கப்படவில்லை என்பதை மட்டுமல்ல, இதைவிடச் சிறந்த சட்டம் ஒன்றை யாத்திட முடியாது என்பதையும் அறிவர். அத்தோடு இச்சட்டம் ஒன்றே, புனித குர்ஆனிய சட்டங்கள் மனித மேம்பாடு கருதி அகில உலகுக்கும் ஓர் அருளாகவே இறக்கி வைக்கப்பட்டது என்ற இறை கூற்றை ஏற்றுக் கொள்ள வைக்கும்.
அண்மைக்கால யூத விஞ்ஞானி ஒருவரின் கண்டு பிடிப்பு, ஒரு பாலியல் தொடர்பில் பெண்ணின் உட்செல்லும் ஒரு ஆணின் ரேகைகள் முற்றாக அழிவதற்கு மூன்று மாத காலம் செல்கின்றதாம். இவ்வாராய்ச்சியில் கண்டறிந்த உண்மையை அல்குர்ஆன் உறுதிப்படுத்துவதாக அமைந்தது, இத்தா என்ற இச்சட்டமே! இதனை அறிந்த அந்த யூத விஞ்ஞானி இஸ்லாம் அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதம் என்பதை ஏற்று இஸ்லாமியனாகி உள்ளார். இது அல் குர்ஆன் 3:18 ஐ உண்மைப் படுத்துகிறது. இக்கண்டுபிடிப்பு, அல்குர்ஆனின், “இத்தா“ பற்றிய சட்டம், எவ்வளவு தூரதிருஷ்டியுடன், உலகின் எந்த மாற்றங்களுக்கும் முகங் கொடுத்து, தாய்மாரையும், அவர்தம் செல்வக் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்பது இறை கருணையே அன்றி வேறென்ன? இது முன்னைய பந்திக்கு மேலும் வலுவூட்டுகின்றது.
இன்று உலகளாவிய ரீதியில் சிறுவர் பாதுகாப்புப் பற்றிப் பேசப்பட்டும், சட்டங்கள் யாக்கப்பட்டும், அமைப்புக்கள் தோற்று விக்கப்பட்டும் உள்ளன. ஆயினும், மேற்கூறிய சந்தர்ப்பங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறார்களைப் பாதுகாப்பதற் கான எவ்விதச் சட்டமும் எங்கும் கிடையாது. அப்படியான சட்டம் மனிதனால் யாக்கப்படவும் முடியாதென்பதை, நம்மத்தியில் காணப்படும் நிலைமைகளில் இருந்து அறியக் கூடிய தாயுள்ளது. குர்ஆன் வகுத்துள்ள இத்தா சட்டம் ஒன்றே குற்றமற்ற பச்சிளம் பாலகருக்குப் பாதுகாப்பைத் தருகின்றது. ஆதலின் சமூக நலன் கருதும் எவராயினும் இவ்வரிய சட்டத்தைப் புறக்கணித்துவிட முடியாது என்பது தெளிவாகின்றது.
ஆதலின் இத்தா என்ற இறையருட் சட்டத்தை, பெண்களின் உரிமை களுக்காகப் போராடும் பொதுநல தாபனங்களின் அறிதலுக்கும், அமுல் நடத்தலுக்குமாக விட்டுவைக்கிறேன்.
ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் எவராலும் இழைக்கப்படும் அநியாயம் அவளது கற்பைக் கேள்விக் குறியாக்குவதைத் தவிர வேறொன்றாக இருக்க முடியாது என்பதை யாரும் எக்காரணம் கொண்டும் மறுக்கவியலாது.
அத்தோடு எக்குற்றமும் அறியாத, களங்கமற்ற குழந்தை, களங்கப் படுத்தப்பட்டு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டுவிடும் அநியாயத்தைவிட பெரிய அநியாயம் எதுவும் இருக்க முடியாது.ஆக இவ்விரு இழிநிலைகளும் அதன் அடித்தளத்திலேயே அழிக்கப்படும் அரிய சேவையை இத்தா சட்டம் செவ்வனே நிறைவு செய்கின்றது.
– நிஹா –