Monday, January 28, 2013


ஹலால் சான்றிதழா? ஹறாம் பற்றிய அறிவா? அல்லாஹ் அறிவித்தது! 


உயிரினங்களின் வாழ்வுக்கு ஊன்றுகோலாக அமைவது உணவு. உணவின் தேவை இல்லாமல் இருந்திருப்பின் உலக இயக்கமும் நின்றிருக்கும். அந்த அடிப்படையிலேயே அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் பொறுப்பைத் தன்வசம் வைத்துள்ளான் “றஸ்ஸாக் - உணவளிப்பவன்“ என்ற பெயரைத் தாங்கிய வல்ல நாயன் அல்லாஹ்.

அனைத்தையும் மனிதருக்காகவே படைத்துள்ளதாகக் கூறும் அல்லாஹ், மணமுள்ளவற்றை, உண்ணுங்கள், பருகுங்கள், வரம்பு மீறாதீர்கள் எனக் கூறி, அவற்றில் சிலவற்றைத் தடுக்கப்பட்டவைகளாக வகைப்படுத்தி யுள்ளான். இந்நடை முறை, பாலகன் முதல் வயோதிபர் வரை, பாமரர் முதல் பாவலர் வரை மிக இலகுவாக, குறுகிய நேரத்தில் அறிந்து கொள்ள உதவுவதே.  எவை சாப்பிடக் கூடாதவை என்ற அறிவு இருந்தால்,  தங்கள் சூழலில் கிடைக்கக் கூடியவற்றில் இருந்து சாப்பிடக்கூடிய உணவுகளை எவ்வித கஷ்டமுமின்றி, இலகுவாக, சந்தேகமற அறிந்து உண்ணலாம் என்பதே!

இந்நடைமுறை கடந்த 1400 வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் அனைத்து முஸ்லிம்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு அமோக வெற்றியையும் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் இஸ்லாமியரின் ஹறாமான உணவுகளை மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அத்தோடு, முஸ்லிம்கள் அவ்வுணவுகளைப் பெற்றுக் கொள்வதில் உதவுபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அந்த அடிப்படையில், இந்நாட்டில், இறைச்சிக் கடைகள் அனைத்தும் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருவது நாமறிந்ததே. அதற்கு மேலும், உலக மக்களின் அங்கீகாரம் கூடக் கிடைத்துள்ளது எனலாம். அவற்றை நாம் நமது நடைமுறை வாழ்வில் மிகச் சாதாரணமாகக் காணக் கூடியதாகவுள்ளது.

குர்ஆனியச் சட்டங்களின் போக்கை அவதானிக்கும் ஒருவர், அல்லாஹ் மிக நுட்பமமாக சட்டங்களை ஆக்கியுள்ளமையை அறிந்து கொள்ள முடியும். சுருக்கமாகக் கூறின், அத்தியாவசியமான சில விடயங்களில் அவன் கையாண்டுள்ள  வழி, நடைமுறை பிரச்சினைகளை எக்காலத் திலும் ஏற்படுத்தாத நிலையில் யாக்கப்பட்டுள்ள தன்மையைக் கொண்டு  உள்ளதைக்  காணலாம்.

ஆடை பற்றிய சட்டத்தை யாக்கும் போது, அத்தியாவசிய தேவை கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதையும், உலகின் எந்த மூலையில், எவ்வித சுவாத்தி யங்களிலும், வரப்பிரசாதங்களுடனும், வளங்களுடனும், வாய்ப்புக்களு டனும்  வாழ்பவர்கள் தமது அந்தஸ்து. உடல்நிலை, தேவை, வசதி போன்ற பல் வேறு நிலையிலும் அணியக் கூடிய பண்பைக் கொண்ட விதமாகப் பரிந்துரை செய்துள்ளான்.  ஆம் மானத்தை மறைக்கக் கூடியதாக, அழகாக, அலங்காரமாக அமையக் கூடிய விதத்தில் ஆடையைத் தேர்வு செய்யும் உரிமையை நமக்களித்துள்ளான். இதை விளக்கப் புகின் நமது நோக்கம் திசை திரும்பி விடும். உய்த்துணர்வோர் நன்மைகளை அறிந்து இறை கருணையை உவப்பர்.

பெண்களுக்குரிய ஆடை விடயத்தில் அல்லாஹ், பாதுகாப்பு, மானம், குழப்ப நிலை தவிர்ப்பு போன்ற காரணங்களை முன்வைத்து,சிறிது கண்டிப்பான போக்கைக் கையாண்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. சிருஷ்டிப்பின்  அவசியம் காரணமாக, பெண்கள் கவர்ச்சிகரமாகப் படைக்கப்பட்டுள்ளனர். கண்டதும் ஆசை கெள்ளும் அளவில் அவர்களது உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை உங்களுக்குப் பூந்தோட்டமாக ஆக்கித் தந்துள்ளளோம் எனவும். நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும், அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் கூறியுள்ளான்.

இதனால் சில முறைகேடுகள் நடந்து விடும் என்பதையறிந்த வல்ல நாயன் அதற்கான உடையைப் பரிந்துரை செய்திருக்கிறான். உங்கள் ஆடைகளைத் தொங்க விடுங்கள், உங்கள் முந்தானைகளால், உங்கள் மார்பகங்களை மூடிக் கொள்ளுங்கள், தானாகத் தெரிவதைத் தவிர வெளிப்படுத்தாதீர்கள். நிலத்தில் பாதங்களை அடித்து  குலுங்க நடவாதீர்கள், நளினமாகப் பேசாதீர்கள், நோயுள்ள நயவஞ்சகர் பிழையாக நடக்க முற்படுவர்,  இவை அடையாளங் காணப்படுவதற்கு மிக நெருக்க மானவை என்றெல்லாம் கூறியுள்ளமை எந்தளவு நமது நன்மையில் கரிசனை கொண்டு, சிறப்பான கவனத்துடன் சட்டங்கள் யாக்கப்பட் டுள்ளதைக் காட்டுகின்றது. ‘அடையாளங் காணப்படுதல்’ என்ற தொடரில் ஆயிரம் உண்மைகள் பொதிந்துள்ளன.

மேலும், ஆண்களாயினும், பெண்களாயினும் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் எனக் கூறியிருப்பதன் கரு த் தை உற்று நோக்குவோர், அது பல விடயங்களுக்கு, சிக்கல்களுக்கு தீர்வுகளைக் கூறிக் கொண்டிருப்பதை அறிவர்.

திருமண விடயத்தில் மிகவும் கறாறான நடைமுறையைக் கையாண்டு உள்ளான். அதற்காக, திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டவர்களின் பட்டியலை விளாவாரியாகவும், திருமணம் செய்ய ஆகுமாக்கப்பட்ட வர்களின் பட்டியலை விளாவாரியாகவும் வெளிப்படுத்தியுள்ளான். காரணம், திருமண பந்தத்தில் நடைபெறும் எவ்வித தவறும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்றிருந்தாலும், அவைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, பிழையான திருமண பந்தங்களால் பெறப்படும் குழந்தையின் உரிமை, கௌரவம், சமூக நிலை போன்ற இன்னோரன்னவை பெற்றாரின் பிழைகளால், பிள்ளைகளின் வாழ்க்கை யைக் கேள்விக்குறியாக்கி விடக் கூடாது என்ற பெருங் கருணையே!

மதுவையும், சூதையும் பற்றிக் கேட்கிறார்கள், அதில் சில நன்மைகள் உண்டே ஆயினும், அவற்றால் வரக்கூடிய பாவங்கள் அதிகம் என்பதனால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளும்படி கூறுகின்றான்.

இன்று உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்திற்குப் சவாலாகப் பெரும் பிரச்சினையாக  உருவெடுத்துள்ள தமிழில் வட்டி என்ற சொல்லாலும், ஆங்கிலத்தில் ' usury' எனவும் கூறப்படும் “றிபா“ என்ற நடைமுறையில் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை ஆக்கவல்லது என்பதை அறிந்தி ருந்த அல்லாஹ், மிகத் துல்லியமாக அதன் கருத்தை, அதாவது றிபா வுக்கான வரைவிலக்கணத்தைத் தனது குர்ஆனில் வெளிப்படையாகவே தந்துள்ளான். இது இன்றைய அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினை களுக்கும் இலகு தீர்வைத் தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டுள்ளது. அறிவோர் இதன் பயனை அடைவர். 3:130இல் ‘இறைநம்பிக்கையாளர் களே! இரட்டிப்பாக்கப்பட்ட பன்மடங்காகிவிடும் “றிபா“வை நீங்கள் தின்னாதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்’ எனக் கூறியிருப்பது நமது அறிதலுக்கு உரியது.

இப்படியாக சட்டங்களை ஆக்கி வைத்த அல்லாஹ், உணவு விடயத்தில், சிலவற்றின் பெயர்களைக் குறித்து தடை செய்யப்பட்டதாகக் கூறி யுள்ளான். ஆம், தானாகச் செத்தவை, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டவைகளைத் தடுத்துள்ள தாகக் கூறியுள்ளான். அதற்குக் காரணம் அவை அசுத்தமானவை என்கின்றான். அதற்கு மேலும், தனது கருணையின் வெளிப் பாடாக, நீங்கள் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமின்றியும் நிர்ப்பந்திக் கப்பட்டு, அவற்றை உண்டால் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கிறான் எனக் கூறுகிறான். இந்த விதிவிலக்கு, மனித வாழ்க்கையில் உணவின் அத்தியாவசியம் கருதிச் செய்யப்பட்ட ஏற்பாடே என்பதை அறியலாம்.

இந்த அளவில், தலையங்கத்துக்கு வந்தால், ஹலால்சான்றிதழ் பெற்று ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் பொருட்கள் பற்றிய அறிவா, அன்றி ஹறாமானவை என்னவென்று அறிந்து அவற்றை விலக்கி வாழும் அறிவா அல்லாஹ்வால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் ஹறாம் பற்றிய அறிவே, ஏற்புடைத் தன்மை கொண்டது, இலகுவானது, பாமரரும், சிறுவருங்கூடத் தெரிந்து கொள்வது, நினைவில் வைத்திருக்கக் கூடியது, நிச்சயமானது, சந்தேகம் அற்றது,  எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாதது. எவருக்கும் தொல்லை தராதது, எக்காலத்துக்கும் உகந்தது, நடைமுறைச் சிக்கலற்றது. இவற்றை மறுப்பாருண்டோ!

ஆனால், ஹலால் முத்திரை பொறிக்கும் வழமை, அண்மைக் காலத்தில் எவராலோ நயவஞ்சக நோக்கோடு அறிமுகப்படுத்தப் பட்டு,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது நம்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக விஸ்வரூபம் பெற்று உள்ள ஹலால் சான்றிதழ், ஹலால் முத்திரை அல்லாஹ்வின் சுன்னாவை விட்டு விலகியது.  நடைமுறைச் சாத்தியமற்றது. அபாயகரமானது. குழப்பத்தை உருவாக்குவது.

உலகம் தோன்றிய காலமுதல், ஹறாமானதைத் தவிர்த்து வாழ்ந்ததற்கு மாறான,, நபிகளார் முதல் எவரும் பின்பற்றியிராத நடைமுறை.

பல் வேறு சிக்கல்களையும், பிரச்சினைகளையும் தோற்றுவித்து, தற்போது பாரிய எதிர்ப்புக்குள்ளாகி, முஸ்லிம்களின் இருப்பு, அவர்கள் தம் மதக் கடமை களைக்கூடச் செய்ய முடியாத நிலை, அவர்களின் வாழ்வாதாரமான வியாபார நடவடிக்கைக்குக் குந்தகம் போன்றவற்றை உருவாக்கியுள்ளது.

1400 வருடங்களாகப் பரீட்சிக்கப்பட்டு வெற்றியடைந்த அல்லாஹ்வின் வழியான ஹறாம் என்பதை விலக்கி ஹலாலை முத்திரை ரூபத்தில் தேடுதல் என்ற மார்க்க அங்கீகாரமற்ற முறை பல்வேறு பிரச்சினைகளை குறுகிய கால எல்லையுள் முகம் கொடுக்க வைத்துள்ளது.

அது தோற்றுப் போன ஒரு நடைமுறை.  இதனை, ஹலால் முத்திரை யுடன், பன்றி இறைச்சி  சுப்பர் மாக்கட்டுகளில் விற்பனைக்குக் காணப் படுவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே கூறி யுள்ளமை நிரூபிக்கின்றது.  இதன் காரணமாக, அது, ஹலால் அல்ல, ஹறாம் என்பது  பற்றிய அறிவை , எச்சரிக்கையை மக்களுக்கு பத்திரிகையாளர் மாநாட்டைக்  கூட்டி வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டான, அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் ஹலால் முத்திரை தோல்வியை மட்டுமல்ல,மிகப் பெரும் குற்றங்களுக்கும் வித்திட் டுள்ளது. அதாவது முத்திரையைப் பார்த்து ஹறாமானதை அப்பாவி முஸ்லிம்கள் உண்ணும் இழிநிலை ஏற்படுத்தி உள்ளது என்பதால் அறியப்படுகின்றது.  இது விளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனை யைச் சாட்டி விடுகின் றான் என்பதைக் காட்டுவதுடன், அல்லாஹ்வினது அங்கீகாரமற்ற எதுவும் தோல்வியையே தழுவும் என்பதை வெளிப்படுத்  துகின்றது.

ஹலால் சான்றிதழ் வழங்கி, ஹலால் முத்திரையுடன் உணவுப் பொருட்களை விற்பனைக்கு விடும் முறையால் ஏற்படவுள்ள பயங் கரங்களை, மிகக் குறுகிய காலத்திலேயே அறியத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். எத்தனை முஸ்லிம்கள் ஹலால் முத்திரை பார்த்து, ஹறாமானதைத் தாமும் உண்டு, தமது பாலகருக்கும் கொடுத்து வருகி றார்களோ!

இக்குற்றத்தை ஹலால் முத்திரை பொறிப்பதற்காகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தமது முத்திரையைப் பொறிக்கும் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே சுமக்க வேண்டி வரும். மறுமையில் தீர்ப்பளிப்பதாகக் கூறும் அல்லாஹ், இங்கும் அவமானங்களையும், தோல்விகளையும், அச்சுறுத்தல்களையும் சந்திக்க வைத்துள்ளான்.
                                                                                         ஹா.மு.நிஸாம்
Colombo 03.
2013.01.28
Mobile No: 0718156970

No comments: