Commented by nizamhm1944 on : http://tinyurl.com/kf28vgc
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
‘வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்’
வடக்கு முஸ்லிம்கள் ஓர் இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். சட்டியில் இருந்து நெருப்பினுள் விழுந்த கதையே தவிர எதுவும் இல்லை.
அனைவைராலும் கைவிடப்பட்டு, தேர்தல் காலங்களில் எதைஎதையோ எல்லாம் பேசி, அவர்களை வாக்குகளை சூறையாடித் தம்மை வளர்த்துக் கொண்ட வரலாறு மட்டுமே மிச்சம். நான் சில உண்மைகளை வெளிப்படுத்த முனைந்தால் யாரையும் தாக்குவதாக அமைந்து விடும்.
எப்படியாவது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொண்டிருந்த தந்திரத்திற்கு மேலாக, தற்போது அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், அவ்வாக்குகளை மீண்டும் உள்வாங்கும் நோக்கில் மட்டுமே மீள் குடியேற்றம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை நடந்து முடிந்தவைகள் மிகவும் துலாம்பரமாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட சிலருக்குக் கொடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள், மக்களுக்குக் கிடைத்தது போன்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது.
அவர்களது இழப்புகள் பற்றி எவ்வித கணிப்புக்கூட நடைபெறவில்லை என்பதைத் தவிர சொல்வதற்கு குறைந்த அளவில்கூட எதுவும் இல்லை. சில சில்லறைகளையும் உணவுப் பொதிகளையும் வீசி, அவர்களின் வறுமையை விலையாக்கிக் கொண்டு உள்ளனர் சுயநலமிகள். (அதற்கு வக்காளத்து வாங்கும் மாமாக்களுக்கும் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் செக்கிலும் நக்குவர், சிவலிங்கத்திலும் நக்குவோர்.) அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனரே அன்றி எந்த சீரான வேலைத் திட்டங்களும் அவர்களுடைய இழப்புக்களுக்கான ஏற்புடை முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை என்பதே யதார்த்தம். விளம்பரங்களுக்குச் செலவழிக்கப்படும் அளவு நிதிகளாவது அம்முஸ்லிம்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளனவா என்பதை எவராவது நெஞ்சில் கைவைத்துக் கூறுவார்களா?
23 வருடப் பிரிவின் போது கூட ஏற்பட்டிராத கசப்பான, வெறுப்பான சம்பவங்களே தமிழ் முஸ்லிம் மக்களிடையே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன. இந்நிலைக்கு முஸ்லிம் - தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்புக் கூற வேண்டியோர். மதஉணர்வாளர்களும் பங்குதாரர்களே!
உண்மையில் வடக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் மிக அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தவர்கள். புலிகளால் விரட்டப்பட்ட பின்னர் கூட அவர்களுக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டிருக்கவில்லை. தம்மை விரட்டியதற்காகத் தமிழர்களை அவர்கள் ஒருபோதும் குற்றஞ்சாட்டவில்லை எனபதிலிருந்து அவர்களது புரிந்துணர்வை அறிந்து கொள்ள முடியும்.இதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
முஸ்லிம்களுக்கோ அன்றி கத்தோலிக்கருக்கோ, இந்துக்களுக்கோ கூட அங்கு பிரச்சினை ஏதாவது ஏற்பட்டிருந்தால் அவை எங்கிருந்தோ வந்து அங்கு குடியேறியவர்களால், தமது சுயநலங்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே. பிரித்தாழும் தந்திரம். மதங்கள் கூ்ட அனைத்து சாராராலும் மிக கௌரவமாகப் பின்பற்றப்பட்டன. மன்னாரின் உண்மை நிலையை அறிய விரும்பும் ஒருவர் 1990 க்கு முந்திய மன்னாரையும் அங்கு வாழ்தோரின சமூக இணக்கத்தையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும்.
புலிகளின், முஸ்லிம்களை விரட்ட வேண்டும் என்ற சிந்தனை கூட, அங்கு வாழ்ந்த தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறின் அது மிகையாகாது. முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர் மனங்களை வெல்லுவதில் அவர்கள் தோல்வியே கண்டார்கள். அரசுகூட, அந்நேரம் அவ்வின அழிப்பைக் கண்டுங்காணாதிருந்த தற்குக் காரணம், அதனை, முஸ்லிம் - தமிழ் கசப்புணர்வை, கிழக்கில் போல் ஏற்படுத்திட வேண்டுமென்ற இழிசிந்தனையே!
அனைத்துக் கிராமங்களின் பெயர்கள் கூட மதம் சார்ந்தவைகளாக அல்லாது அழகான காரணப் பெயர்களாகவே காணப்பட்டன. இது அங்கு வாழ்ந்தோரின் மனோ நிலையைப் பிரதிபலிக்க வல்லது. அரசு நினைத்திருந்தால், ஒரு சிறிய சுற்றுநிரூபத்தின் மூலம் அவற்றைச் செல்லாதாக்கி விடலாம். ஆனால் அதுவே பிரச்சாரக் கருவிகளாக மாற்றப்படுள்ளது என்பதை அவதானிக்கும் ஒருவர் சீராகச் சிந்திதது உண்மைகளை அறிவார்.
முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களே மக்களை இன்றைய நிலையில் சிந்திக்க வைத்துள்ளன. தமிழ் அரசியல் வாதிகள்கூட துவேஷத்தின் மூலம் வாக்கு வங்கியை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தமையே துர்அதிர்ஷ்டமாகும். முஸ்லிம்கள் அன்று போல் இன்றும் வாழ, இத்தேர்தலை மிகச் சிறந்த சந்தர்ப்பமாகக் கருதி, தமது தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பேரை இனங்கண்டு கொள்ளுங்கள்.